11 May 2024

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூட தப்பிப் போனதுண்டு. பெரிய நட்சத்திரங்களின் புதுப்புது படங்கள் வெயிலை விட சுடச் சுட வெளியாவது தப்பியதில்லை.

இந்த 2024 என்னவோ சோதனை காலம்தான் போல. பெரிய நட்சத்திரங்களின் எந்தப் படமும் வெளியாகாமல் கோடை சோடை போய் விட்டது. விடுவார்களா நம் மக்கள்? விஜய் நடித்த கில்லியையும், அஜித் நடித்த தீனாவையும் மீண்டும் வெளியிடச் செய்து (ரீரிலீஸ்) கொண்டாடுகிறார்கள்.

கம்பித்தட இணைப்பு (கேபிள்), அலைவரிசை வழி இணைப்பு (டி.டி.எச்.), இணையவழி இணைப்பு (ஓ.டி.டி.), வலையொளி (யூடியூப்) போன்றவற்றில் பார்க்கப்படும் திரைப்படங்கள், தொடர்கள் மற்றும் தொலைவரி (டெலிகிராம்) மூலம் பதிவிறக்கம் செய்து பார்க்கப்படும் திரைப்பங்கள் என எவ்வளவோ வந்தாலும் திரையரங்கிற்குப் போய் படம் பார்த்துக் கொண்டாடி மகிழ்வது தமிழர்களின் மாறாத குணமாகும்.

தமிழ்ப்படங்கள்தான் என்றில்லாமல் வந்தாரை வாழ வைத்து விருந்தோம்பும் பண்பில் தலைசிறந்து விளங்கும் தமிழர்கள் பிரேமலு, மஞ்சுமள் பாய்ஸ், ஆடு ஜீவிதம், ஆவேசம் போன்ற மலையாளப் படங்களையும் பார்த்துக் கொண்டாடுகிறார்கள். எம்மொழியையும் தம்மொழியாகக் கருத்தும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் தமிழர்களின் பண்பாட்டால் நிகழும் இத்தன்மையும் போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியதாகும். இப்போற்றுதலுக்குரிய பண்பைப் பயன்படுத்தித் தமிழ்ப்படங்களுக்கு மலையாள தலைப்பிட்டு வெளியான திரைப்படங்களை என்ன சொல்வது? அதையும் வேறு வழியின்று பொறுமையுடன் பார்த்துத் தொலைத்தார்கள் நம் தமிழ் மக்கள்.

கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகாமல் போனது தமிழர்களின் பொழுதுபோக்கு உலகுக்கு ஏற்பட்ட பெரிய இழப்பாகும். இந்த இழப்பைத் தாங்கும் வல்லமையும் பக்குவமும் பெற்றிருப்பது தமிழர்களின் தனிச்சிறப்பாகும்.

வரக்கூடிய கோடைகளில் இது போன்ற இழப்பு நேரிடாமல் பார்த்துக் கொள்வது ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ், சிம்பு போன்ற நட்சத்திரங்களின் கையில்தான் இருக்கிறது. செய்வார்களா? அவர்கள் இதைச் செய்வார்களா?

கமல், விஜய் போன்றோர் அரசியல் பக்கம் போனாலும் அஜித், தனுஷ், சிம்பு போன்றோர் இதைப் பொறுப்பேற்று செய்ய வேண்டும். தமிழர்களைத் தவிக்க விடக் கூடாது. அவர்களுக்கு உங்களை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்? போனால் மதுபானக் கடைகளுக்குப் (டாஸ்மாக்) போவார்கள் அல்லது உங்களுடைய திரைப்படங்கள் வெளியாகும் திரையரங்கங்களுக்குத்தானே போகிறார்கள். வேறு போக்கிடம் ஏது? உங்களையே நம்பி இருக்கும் அவர்களை ஏமாற்றாமல் புதுப்புது படங்களாக வெளியிட்டுத் தள்ளுங்கள். தமிழ்கூறு நல்லுலகம் உங்களுக்கு என்றும் கடமைப்பட்டிருக்கும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஆற்றல் நட்சத்திரம் (பவர் ஸ்டார்) சீனிவாசம் கூட ஒரு படத்தை வெளியிடாமல் ஏமாற்றி விட்டார் பாருங்கள். அதைத்தான் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

*****

9 May 2024

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்!

கருமம்டா இதெல்லாம்!

இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்?

நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

இன்னொருவரைப் போல வேடமிட்டு, அதை ஒரு தொழில்முறையாக ஆக்கிக் கொண்டு, பின்பு அதையே ஒரு வாழ்க்கை முறையாக ஆக்கிக் கொண்டு, இதெல்லாம் என்ன கருமம்டா? இப்படி என்னை நானே கேட்டுக் கொள்வேன்.

கூடுதலாக. ஒரு மனிதருக்கு இப்படி ஒரு சுதந்திரம் கூட இருக்கக் கூடாதா? இப்படியும் கேட்டுக் கொள்வேன். ஒருவர் யார் மாதிரி வேண்டுமானாலும் இருந்து கொள்ளலாம். அதற்கான சுதந்திரம் இருந்தாலும் ஒருவர் அவர் மாதிரி இருப்பதற்குப் பயன்பட்டால்தான் அந்தச் சுதந்திரத்திற்கு ஓர் அர்த்தம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

இப்படி எங்கள் ஊரில் சின்னா என்பவர் இருக்கிறார். ஏறக்குறைய அவர் எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் சூப்பர் ஸ்டார் ரஜினியாக வாழ்ந்து வருகிறார். ரஜினியினுடைய பிறந்த நாளை தன்னுடைய பிறந்த நாளாகக் கொண்டாடி வருகிறார். ரஜினியாக அவர் பிறந்திருக்க இவர் வேறு ஏதற்கு ரஜினியாகப் பிறப்பெடுக்கிறார்? இவருடைய பிறந்த நாள் என்னவாகிறது? இந்த இரண்டு கேள்விகளுக்குமான பதில்களை நான் எப்போது தேடிக் கண்டுபிடிப்பேனோ?

சின்னா எங்கே போனாலும் ரஜினியின் வெள்ளை ஜிப்பா - பேண்ட் மோடிலேயே போய் வருகிறார். அது அண்ணாமலையும் படையப்பாவும் அவருக்குள் ஏற்படுத்திய தாக்கங்கள். அல்லது தாக்குதல்கள்.

ரஜினியைப் போல இரண்டு பெண் பிள்ளைகளுக்குத் தகப்பனாக வேண்டும் என்று ஆசைப்பட்டார் சின்னா. கல்யாணம் ஆகாததால் அந்த ஆசை நிறைவேறவில்லை. சின்னாவைப் பார்த்து அவர் ரஜினியாக இருப்பதால் அவருக்கு யாரும் பெண் கொடுக்க முன்வராமல் போனதில் நேர்ந்த சோகம் அது. ஒருவேளை சின்னா சின்னாவாகவே இருந்திருந்தால் அவருக்கு யாரேனும் பெண் கொடுத்திருக்கவும் கூடுமோ என்னவோ?

விஜய், அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ் என்று வந்தும் சின்னா இன்னும் ரஜினி ரசிகராகவே இருக்கிறார். அவரைப் பார்த்து, மாற்றம் என்பது மாறாதது என்ற தத்துவம் தோற்றுப் போய் விட்டது.

இப்போது ரஜினி வேஷத்தோடு ஆடல் பாடல் குழுக்களுக்குப் போய் வருகிறார். ரஜினி போல நடை நடப்பார். சிகரெட்டைத் தூக்கிப் போட்டுப் பிடிப்பார். இங்கே பாரு கண்ணா… எனத் தொடங்கி ரஜினி வசனங்களைச் சொல்வார். அவர் நடக்க, வசனம் சொல்ல சொல்ல ரஜினிக்கான பிஜிஎம் இசை அதிகபட்ச ஓசையில் ஒலித்துக் கொண்டிருக்கும். அவர் சொல்லும் ரஜினி வசனங்களில் ஆண்டவன் கொடுக்குறதை யாரும் தடுக்க முடியாது என்ற வசனமும் ஒன்று. எனக்கென்னவோ அவருக்கு ஆண்டவன் கொடுக்க நினைத்ததை ரஜினி தடுத்து விட்டாரோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

ரஜினி வேஷம் கட்டி ஏதோ கொஞ்சம் சம்பாதிக்கிறார். மற்ற நாட்களில் டாஸ்மாக்கே கதியெனக் கிடக்கிறார். ரஜினி படம் ரிலீஸானால் பத்து நாட்களுக்கு திரையரங்கிலே கிடக்கிறார். எப்போதாவது என்னைப் பார்த்தால் இருபது ரூபாய் கேட்கிறார். ஏன் அண்ணே உங்களை ரஜினி காப்பாற்றவே இல்லை என்றால், ரஜினியைப் போல ஹா, ஹா என்று ஆரம்பித்துப் பெக்கெ பெக்கே என்று சிரிப்பார்.

கண்ணா! தலைவர் என்ன சொல்லியிருக்கிறார்னா உன்னுடைய வாழ்க்கை உன்னுடைய கையில். புரியுதா? உன்னுடைய கடமையை நீ செய்யணும் என்பார். நீங்கள் மட்டும் ஏன் உங்களுடைய வாழ்க்கையை ரஜினியின் கையில் கொடுத்தீர்கள் சின்னா? நீங்கள் மட்டும் ஏன் உங்கள் கடமையைச் செய்யாமல் ரஜினியின் கடமையைச் செய்கிறீர்கள்? என்று கேட்கத் தோன்றும். அவர் வயதுக்கு மரியாதையா? அல்லது தன்னைத் தொலைத்து விட்ட மனிதன் இந்தக் கேள்விகளைப் புரிந்து கொள்வானா என்ற சந்தேகமா என்று தெரியவில்லை. நான் அந்தக் கேள்விகளைக் கேட்டதே இல்லை.

பரிதாபமாகப் பார்த்துக் கொண்டே இருபது ரூபாய்க்கு ஐம்பது ரூபாயை எடுத்துக் கொடுப்பேன். அந்தப் பார்வையைப் புரிந்து கொண்டது போல என்னைப் பார்த்து, நீ இங்கே இருந்து யோசிக்கிறே தெரியுமா என்று தலையில் விரலை வைத்துக் காட்டி விட்டு, நான் இங்கே இருந்து யோசிக்கிறேன் என்று இதயத்திற்கு அருகில் விரலை வைத்துக் காட்டுவார்.

அந்த ரஜினி எங்கே? இந்த ரஜினி எங்கே? ஒரு ரஜினி இப்படி பல பிம்பங்களை உருவாக்கி அலைய விடுகிறதே என்ற கவலையை எப்படிப் போக்கிக் கொள்வது என்று தெரியவில்லை. ரஜினிக்கள் இப்படி ரசிகர்களைக் கவர்வதாக நினைத்து இப்படிப் பல பைத்தியங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறதே!

ஆண்டவனே வந்தாலும் தமிழ்நாட்டைக் காப்பாற்ற முடியாது என்று ஒருமுறை ரஜினி அரசியல் வசனம் பேசினார். சின்னா போன்ற ரஜினிக்களைப் பார்க்கும் போது ரஜினி சொன்னது உண்மையாகவும் ஆகிப் போகலாம். இந்த ரஜினி போனாலும் சின்னாக்கள் விஜய்க்காகவும் அஜித்காகவும் அடுத்தடுத்த வரப் போகும் நடிகர்களுக்காகவும் உருவாகிக் கொண்டே இருப்பார்கள் போலிருக்கிறதே! சின்னாக்கள் உருவாகாமல் தடுக்க முடியாதா? அது தமிழ்நாட்டின் சாபக்கேடு போலிருக்கிறதே!

*****

6 May 2024

ஏன் வாசிப்புத் தேவைப்படுகிறது?

ஏன் வாசிப்புத் தேவைப்படுகிறது?

மாவட்டந்தோறும் புத்தகக் கண்காட்சிகள் நடைபெறுவது அறிவுச் சூழலில் நல்ல மாற்றம். கல்லூரிகளும் பள்ளிகளும் கட்டாயம் வந்து பார்த்துச் செல்லும் வகையில் நிலைமைகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இதில் கட்டாயங்களும் நிர்பந்தங்களும் இருக்கின்றன என்றாலும் அது ஏற்றுக் கொள்ளக் கூடியதே.

மக்கள் வந்து பார்க்கும் அளவிற்குப் புத்தகங்களின் விற்பனை இருக்கிறதா? மக்கள் பெரும்பாலும் உணவு அரங்குகள், பொருட்காட்சி அரங்குகள், மருத்துவப் பரிசோதனை அரங்குகள் போன்றவற்றில்தான் நிற்கிறார்கள். வந்து விட்டோம் என்பதற்காகப் புத்தக அரங்குகளை ஒரு பார்வை பார்த்து விட்டு ஒரு புத்தகம் கூட வாங்காமல் வருவோர்களைப் பார்க்க முடிகிறது.

புத்தகங்கள் தற்போது பி.டி.எப்.களாக வாசிக்க கிடைக்கும் போது இவற்றை வாங்கி வேறு வாசிக்க வேண்டுமா என்ற ஒரு கேள்வி இருக்கிறது. கல்லூரி மாணவர்கள் இப்படிப்பட்ட கேள்விகளை எழுப்புகிறார்கள். படிப்பதற்குப் பாடப்புத்தகங்கள் இருக்கும் போது இவற்றை வேறு படிக்க வேண்டுமா என்ற கேள்வியும் இருக்கிறது. பள்ளி மாணவர்கள் இப்படிப்பட்ட கேள்விகளை எழுப்புகிறார்கள். ஒரு சில ஆசிரியர்களிடமும் இப்படிப்பட்ட கேள்வி தொக்கி நிற்கவே செய்கிறது.

பேராசிரியர்கள், ஆசிரியர்களாக இருப்பவர்கள் எத்தனை புத்தகங்களை வாங்குகிறார்கள் என்பதைக் கணக்கெடுத்தால் மாணவர்கள் ஏன் வாங்க மறுக்கிறார்கள் என்பது புரியலாம்.

வாழ்க்கைக்கான அடிப்படைகள் கிடைத்து விடும் போது புத்தகங்களைப் படிப்பதற்கான தேவை என்ன இருக்கிறது என்ற கேள்விகளுக்கு என்ன பதிலைச் சொல்வது? ஆடு, மாடு, யானை, புலி, சிங்கம் போன்ற உயிர்களாக நம்மை நினைத்துக் கொள்வதா?

ஏன் புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்பதற்கு நான் கீழே சொல்லும் காரணம் சமாதானமாகவும் இருக்கலாம். ஓரளவுக்குச் சரியான காரணமாகவும் இருக்கலாம்.

மனிதர்களின் இருத்தல் அதுவும் மனிதர்களுக்கு மத்தியில் இருத்தல் புதிரானது. அந்தப் புதிரை விடுவித்துக் கொள்ள புத்தகங்களை வாசிப்பது தவிர்க்க முடியாதது. புத்தகங்களுக்குப் பதில் காட்சித் திரைகள் போதுமென்று நினைக்கலாம். காட்சித்திரைகளைச் சரியாக உள்வாங்கிக் கொள்வதற்கும் சரியான பார்வையை உருவாக்கிக் கொள்வதற்கும் வாசிப்பு என்பதைத் தவிர்க்க முடியாது.

இந்த வாசிப்புக்கு முகநூல், டிவிட்டர், வாட்ஸ்ஆப் மட்டும் போதுமா என்றால் ஆழமான புரிதலுக்கும் நிபுணத்துவத்துக்கும் இவை எந்த அளவுக்கு உதவும் என்பது நமக்கு நாமே அவசியம் எழுப்பிக் கொள்ள வேண்டிய கேள்வி.

ஒரு படைப்பிற்கான பின்னணியாக மட்டுமில்லாமல் வாழ்வதற்கான பின்னணியாகவும் வாசிப்பு இருக்கிறது. மொழி எனும் குறியீடு வாழ்க்கையில் உணர்வில் அறிவில் ஏற்படும் தாக்கத்தைத் தவிர்த்து விட முடியாது. நீங்கள் எழுத்து வடிவில் தவிர்க்க நினைத்தாலும் பேச்சு வடிவில் அது ஒரு தாக்கத்தை உண்டு பண்ணிக் கொண்டுதான் இருக்கும். அந்த ரூபக் குறியீடுகளின் அரூப வளர்ச்சியை நீங்கள் வாசிப்பைக் கொண்டுதான் புரிந்து கொள்ள முடியும்.

எவ்வளவு வாசிக்க வேண்டும் என்பதற்கு ஒரு கணக்கு இருக்கிறதா என்றால் அது சுவாசிப்பைப் போன்றதுதான். அது தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். நீங்கள் எவ்வளவு காலம் வாழ விரும்புகிறீர்களோ அவ்வளவு காலம் சுவாசித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது போலத்தான் வாசிப்பும்.

ஒவ்வொரு காலத்திலும் மொழியை விதவிதமாகச் சுழற்றுபவர்கள் உருவாகிக் கொண்டு இருக்கிறார்கள். அந்தச் சுழற்றலின் விளைவாக வாழ்வை வெகு நுட்பமாகப் புரிந்து கொள்ள வேண்டிய நிலைமையில் இருக்கிறோம். நிஜமாக அப்படி இல்லையென்றாலும் அதை வைத்து அப்படி இல்லையென்கிற முடிவுக்கு வரவாவது அது அவசியமாகவும் இருக்கிறது.

ஒரு மோசமான புத்தகம் என்று ஒன்றை நீங்கள் புறக்கணித்து விடலாம். அதன் பின்னணியை அலசுவதற்காக நீங்கள் அதைப் படித்தாக வேண்டும். ஒன்று இருத்தலுக்கான விசாரணைகள் அவசியம் தேவைப்படுகின்றன என்பதால் நீங்கள் ஒரு கருத்துருவைத் தாக்கல் செய்துதான் ஆக வேண்டும். எதிர்க்கருத்துருவும் தாக்கல் செய்யப்பட்டுக் கொண்டுதான் இருக்கும். எல்லாவற்றையும் நீங்கள் பேச்சு வடிவில் மட்டும் பதிவு செய்து பரிசீலித்து விட முடியாது. அதற்கு மொழியின் எழுத்து வடிவிலான ஒரு வடிவம் தேவைப்படுகிறது.

வாயினால் ஒரு வாதத்தை எடுத்து வைத்துக் கேட்டு நீங்கள் காலத்தை நீண்ட நேரம் வீணாக்கிக் கொண்டு இருக்க முடியாது. எழுத்தாக்கம் அதை விரைவாகச் செய்து விடும். நீங்கள் காலம் முழுவதும் பேசிக் கொண்டிருக்கும் வாய் மாலங்களும் ஒரு புத்தகமும் ஒன்றுதான். வாழ்நாள் முழுவதும்பேசிக் கொண்டு செய்து கொண்டிருக்க வேண்டிய ஒன்றை ஒரு புத்தகம் சில நூறு பக்கங்களில் முடித்துவிடும்.

புத்தகத்தில் மிகப்பெரிய காலச்சுருக்கம் இருக்கிறது. ஐநூறு ஆண்டு காலத்தை அதன் அத்தனை நுட்பங்களுடன் கடக்க முடியாவிட்டாலும் ஐந்து மணி நேரத்தில் நீங்கள் ஒரு வாசிப்புப் பயணத்தில் கடந்து ஒரு கடலைச் சீசாவுக்குள் அடைப்பது போல அடைத்துவிட முடியும். வேறு எதையும் விட உள்வாங்குவதற்கு கனக்கச்சிதமான வடிவம் புத்தகத்தில் இருக்கிறது.

மனிதர்கள் வாசித்துதான் மேம்பட முடியும். அதற்கான அத்தனை மேம்பாடுகளையும் புத்தகம்தான் கொண்டிருக்கிறது. அவற்றை வெறும் பேச்சிற்குள் அல்லது உரையாடலுக்குள் மட்டுமே அடக்க முடியாது. நீங்கள் வாசித்துதான் ஆக வேண்டும். அல்லது வாசிப்பதை உள்வாங்கத்தான்  வேண்டும். பார்ப்பதை, கேட்பதை உள்வாங்குவதை விட நீங்கள் அதி வேகமாக வாசித்து உள்வாங்க முடியும். இது அனுபவத்தில்தான் அதாவது வாசிப்பு அனுபவத்தில்தான் உங்களுக்குப் புரிய வரும். அந்த வகையில் உங்களால் வாசிப்பை ஒருபோதும் கைவிட முடியாது. வடிவங்களை நாம் என்ன விதமாக மாற்றினாலும் வாசிப்பு இருந்து கொண்டுதான் இருக்கும். ஒன்று நீங்கள் வாசிக்க வேண்டும். அல்லது உங்களுக்காக ஒருவர் வாசிக்க வேண்டும். அதற்கு புத்தகம் எப்போதும் தேவைப்பட்டுக் கொண்டுதான் இருக்கும். அதன் வடிவம் தாளாகவும் இருக்கலாம். மின்னணு வடிவாகவும் இருக்கலாம்.

மனிதராகப் பிறந்து விட்ட நீங்கள் உங்கள் இருத்தலைப் புரிந்து கொள்ள வாசிப்பதை வேறு வழியில்லாமல் செய்வதைத் தவிர வேறு வழியில்லை.

*****

2 May 2024

அமைப்புகளின் உயிர்ப்பும் பெயர்ப்பும்

அமைப்புகளின் உயிர்ப்பும் பெயர்ப்பும்

திருமணம், குடும்பம், பிள்ளைக் குட்டிகள் என்று இருப்பவர்களைப் பார்க்கும் போது நான் இவர்களை அமைப்பியல்வாதிகள் என்று சொல்வேன். இவர்களை நிறுவனவாதிகள் என்று சொல்வோரும் இருக்கிறார்கள். திருமண உறவுகளைக் கட்டிக் காக்க இவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளும் பிரயத்தனங்களும் இருக்கிறதே. அதைப் பார்க்க ரசமாக இருக்கும். சில நேரங்களில் விரசமாகவும் இருக்கும்.

இவர்களிடம் திருமணம், குடும்பம், குழந்தைகள் குறித்த ஒரு தீர்க்கமான கருத்து இருக்கும். இருப்பினும் உரையாடலுக்குப் பெரும் இடத்தைக் கொடுப்பார்கள். நீங்கள் எப்படி வேண்டுமானாலும் உரையாடலாம். கோபப்படலாம். எடுத்தெறிந்து பேசலாம். எல்லாவற்றுக்கும் அனுமதி உண்டு. முடிவில் இவர்களின் கருத்துகளுக்கு ஒத்து வந்து விட வேண்டும். அதுதான் அவர்களின் எதிர்பார்ப்பு. ஒரு விதத்தில் இவர்கள் சாதியவாதிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களின் கருத்துகளுக்கு ஒத்து வந்து விட்டு நீங்கள் எத்தகைய அராஜகங்களை வேண்டுமானாலும் நிகழ்த்திக் கொள்ளலாம். அரங்கேற்றினாலும் ஆட்சேபனையில்லை. அதற்கெல்லாம் சப்பைக் கட்டு கட்டுவார்கள். இவர்களைப் பொருத்த வரை எதிர்பார்ப்பு என்னவென்றால் இவர்களின் கருத்துகளை ஏற்றுக் கொள்வது போல நடிப்பது கூட இவர்களுக்குப் போதுமானது.

அமைப்புகளும் நிறுவனங்களும் எதிர்பார்ப்பது ஏற்றுக் கொள்வதைப் போன்ற நடிப்பைத்தான். அமைப்புகளிலும் நிறுவனங்களிலும் அப்படித்தான் இருக்க முடியும். அது சில பல அதிகாரங்களை அறிந்தோ அறியாமலோ செலுத்திக் கொண்டு இருக்கிறது. அந்த அதிகாரங்களுக்கு ஒத்துப் போகாமல் அதற்குள் அது வாழ விடாது. அதற்குள் இருந்து கொண்டு போராடுவதை அது அனுமதிக்கிறது. அதைச் சிதைக்க அது ஒரு போதும் அனுமதிக்காது. அப்போது அது காத்திரமான தனது அதிகாரத்தை அது கையில் எடுக்கும். தன்னை அழித்துக் கொள்ள எதுதான் விருப்பப்படும்?

அமைப்பு அல்லது நிறுவனம் என்பது கூட்டமைப்புதான். சொல்லப் போனால் மனித உடலே ஒரு கூட்டமைப்பால் ஆனது. எது பார்க்கிறது என்றால் கண்ணா? மூளையா? எது கேட்கிறது என்றால் காதா? மூளையா? தொடுதலை உணர்வது எது? தோலா? மூளையா? ஒரு கூட்டமைப்புத்தான் பார்க்கிறது, கேட்கிறது, தொடுதலை உணர்கிறது. அப்படி ஒரு கூட்டமைப்புதான் அமைப்பும் நிறுவனமும். இங்கு ஒரு தவறு நடக்கிறது என்றால் விரல்களை மாற்றி மாற்றிக் காட்ட முடியும், கண் தவறாகப் பார்த்ததால்தான் மூளை தவறாகப் பொருள் கொண்டது என்பதைப் போல, பதிலுக்குக் கண் தவறாகப் பார்த்தால் என்ன? மூளை ஏன் சரியாகப் பார்க்கவில்லை என்று குற்றம் சாட்டுவதைப் போல.

ஒரு தவறை நியாயப்படுத்த அமைப்புகளும் நிறுவனங்களும் தனிப்பட்ட ஒரு பார்வையை எடுக்கும். அமைப்பில் இருக்கும் ஒருவர் செய்யும் தவறு ஒட்டுமொத்த அமைப்பின் தவறாகாது அல்லது நிறுவனத்தின் தவறாகாது என்றே அது வாதிடும். ஒட்டுமொத்த பெருமைக்கும் அது தன்னுடைய பெயரை மட்டுமே பயன்படுத்தும் என்பது வேறு வகையிலானது.

இணைந்து வாழ நினைக்கும் போது, கூட்டாகச் சேர்ந்து நிற்க நினைக்கும் போது ஓர் அமைப்போ நிறுவனமோ உருவாகத்தான் செய்யும். அது குடும்பம் போன்று சிறிதாகவோ கட்சிகள் போன்று பெரிதாகவோ இருக்கலாம்.

ஒரு கூட்டுக்குடும்பம் தனிக்குடும்பமாகச் சிதறுவது போலவோ, ஒரு கட்சி பல உட்கட்சிகளாக உடைவது போலவோ உள்ளுக்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் அது ஓர் அமைப்பாகத் தன்னையறியாமல் இயங்கிக் கொண்டிருக்கும். உதாரணத்திற்குக் குடும்பத்தை வெறுத்து தனியாக வாழும் சிலர் இணைந்து தனித்து வாழ்வோர் எனும் ஓர் அமைப்பை உருவாக்கலாம்.

ஓர் அமைப்போ, ஒரு நிறுவனமோ உருவாகி சில விதிகளை, கட்டுபாடுகளை, நெறிமுறைகளை உருவாக்கிக்  கொள்வதாக நினைக்கிறோம். அது இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ சில விதிகளுடன்தான் உருவாகிறது. பிறகு அதை நாம் மெருகேற்றிக் கொள்கிறோம், வளர்த்துக் கொள்கிறோம், அதிகப்படுத்திக் கொள்கிறோம்.

ஒவ்வோரு மனித நினைப்பும் அடிப்படையில் தனக்கான ஓர் அமைப்பை எப்படி உருவாக்குவது என்பதாகத்தான் இருக்கிறது. மனிதர்களைச் சுதந்திரமாக விட்டு விடலாம் என்றால் அது வேறு எதற்காகச் சிந்திக்கப் போகிறது? சிந்திப்பதற்காக ஓர் அமைப்பு தேவைப்படுகிறது. ஒரு சிந்தனை அமைப்பற்ற அமைப்பு ஒன்றைச் சிந்தித்து அதிலிருந்து விடுபட நினைத்தாலும் அமைப்பற்ற அமைப்பு என்ற ஓர் அமைப்பை அது தன்னையறியாமலே உருவாக்கி விடும். இங்கு எப்படி இருப்பது ஓர் அமைப்பு என்பதைத் தீர்மானிக்கிறாமோ அப்படி இல்லாதது இன்னோர் அமைப்பாகி நிற்கும்.

ஒரு வரையறைக்குள் எல்லாவற்றையும் கொண்டு வந்து விடலாம் என்று நினைக்கும் போது வரையறை இல்லாமல் இருப்பதும் ஒரு வரையறையாகி விடும். விலக்கிக் கொண்டே போவதாகச் சொல்லலாம். விலக்கிக் கொண்டு போவது ஒரு பழக்கமாகி அதுவே உங்களை நெருங்கி விடும்.

சில முரண்பாடுகள் அடிப்படையில் மிகவும் சிக்கலாகும். அதை ஒருமைப்படுத்தி விட முடியாது. ஒருமைப்படுத்த அது பன்மை மயமாகிச் சென்று கொண்டிருக்கும். பன்மைப்படுத்த நினைக்கும் போது அது ஒருமையாகிக் கொண்டே போகும். இயக்கம் என்பது நிலையாக இருக்கும் ஒன்றில் இயங்குவது போல இருவித முரண்பாடுகளைக் கொண்டிருக்கிறது. தண்டவாளங்கள் நிலையாகத்தான் இருக்கின்றன. தொடர்வண்டிகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. சாலைகள் நிலையாக இருக்க வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன என்றும் சொல்லலாம். ஒட்டுமொத்த பூமியின் இயக்கத்தோடு பார்க்கும் போது இயங்காத தண்டவாளங்களும் சாலைகளும் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன.

தொடர்வண்டியில் இருக்கும் ஒருவர் நிலையாக இருப்பதாகச் சொல்லலாம். அது இயங்கிக் கொண்டிருக்கும் போது நிலையாக இருப்பவர் இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறார். தொடர்வண்டி நிற்கும் போது அவர் தொடர்வண்டியுடன் பூமியின் இயக்கத்தில் உள்ளார். அமைப்பு மற்றும் நிறுவனங்களுக்குள் நிலவும் இயக்கங்களும் இப்படித்தான்.

அமைப்புக்குள் அமைதியாக இருக்கும் ஒருவர் எந்நேரமும் புரட்சிகள் செய்யலாம். ஒரு புரட்சியாளர் அமைப்புக்குள் அமைதியாகலாம். அது எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம். அமைப்பே சிதைந்து போகலாம். இன்னொரு அமைப்பாகவும் உருவாகலாம். சில நேரங்களில் மனித சிந்தனையின் விதிகளுக்கு அப்பாற்பட்டு அமைப்பின் விஸ்வரூபங்களும் அழிவுகளும் நிகழலாம்.

நீங்கள் திருமணம் என்ற அமைப்பை நிராகரிக்கிறீர்கள் என்றால் அதற்கு எதிரான அமைப்பை ஆதரிக்கிறீர்க்ள் என்று அர்த்தம். அமைப்பு குறித்த உடன்பாடும் மறுப்பும் இப்படி ஆகி விடும். ஆம் என்றால் இல்லை என்பதை மறுக்கிறீர்கள். இல்லை என்றால் ஆம் என்பதை மறுக்கிறீர்கள். இந்த ஆம் – இல்லை என்கிற இருமைக்குள் ஒரு கட்சியினைப் பற்றியோ அல்லது இரண்டுக்கும் இடையில் ஊடாடியபடியோ நீங்கள் அமைப்பில் நின்றோ விலகியோ பயணிக்க வேண்டியதைத் தவிர வேறு வழிகள் இருக்காது.

ஒன்று நீங்கள் ஊர் போய்ச் சேர வேண்டும். ஊர் போய்ச் சேராவிட்டாலும் நீங்கள் இருப்பதும் ஓர் ஊர்தான். இதுதான் நிலைமை. நீங்கள் அடைந்து விட்டதாகவும் பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது. அடையவில்லை என்று மறுதலித்து விடவும் முடியாது. உங்கள் பார்வையின் மூலம், தர்க்க்ததின் மூலம் நீங்கள் நியாயப்படுத்தலாம். அது ஒரு வகை நியாயப்படுத்தலாக இருக்கும். மாறான நியாயப்படுத்தலை நீங்கள் மறுத்தாலும் அதுவும் இருந்தே தீரும்.

இதில் நீங்கள் செய்வதற்கு என்ன இருக்கிறது என்று கேட்கலாம். புரிந்து கொண்டு ஊடாடலாம். ஒன்றை நடந்து முடிந்த பிறகே அதற்கான முழுமையை நீங்கள் கொடுக்க முடியும். நடப்பதற்கு முன்னே தீர்மானிக்க நினைக்காதீர்கள். மதில் மேல் செல்லும் பூனைக்கு அதற்கான சுதந்திரம் இருக்கிறது. அதை உங்களின் முன் முடிவுகளால் அதிகாரம் செய்ய நினைக்காதீர்கள். அமைப்புகள் அல்லது நிறுவனங்களின் மதில்களுக்கும் அதன் மேல் நிற்கும் மனிதர்களுக்கும் இது சில வகைகளில் பொருந்தவே செய்யும்.

*****

29 Apr 2024

ரசனையின் சேதாரம்

ரசனையின் சேதாரம்

ஒரு லாரி வந்து மோதுகிறது. அது ஒரு காருக்கு எப்படி இருக்கும்? கார் குட்டிக்கரணம் அடிக்கிறது. காரின் சேதாரமே பார்க்க பயங்கரமாக இருக்கும் போது கதையின் நாயகன் சாதாரண காயங்களுடன் காரிலிருந்து வெளியே வருகிறான். கையில் மட்டும் காயம். அது ஏன் கையில் மட்டும் காயம்? ஒரு துணியை அதுவும் வெள்ளைத் துணியை எங்கு வைத்திருந்தானோ எடுத்துச் சுற்றிக் கொள்கிறான். அதைச் சுற்றிக் கொள்வதற்காகத்தான் அந்தக் காயமோ என்னவோ!

ஏழெட்டுக் குட்டிக்கரணம் அடித்த வண்டியிலிருந்து இப்படிக் காயம் படாமல் தப்பிப்பதே பெரிய ஆச்சரியம். இது எவ்வளவு பெரிய அதிர்ச்சியை உண்டு பண்ணியிருக்கும்? அதிலிருந்து மீள்வது சாமானியமா? அதிர்ஷ்டவஷமாக மீண்டாலும் தலைகீழாகக் கிடக்கும் கார் அப்படியே கிடக்கிறது. எங்கிருந்து எப்போது இன்னொரு கார் வந்ததோ? அதில் ஏறிக் கொண்டு கதையின் நாயகன் தன்னுடைய காரை மோதிய லாரியை நினைவுபடுத்திக் கொண்டு அதுவும் குறிப்பாக லாரியின் எண்ணுடன் தன் மீது மோதிய லாரி டிரைவரின் முகத்தை வரை நினைவில் கொண்டு தேடிப் போகிறான். ஆனால், அவன் மருத்துவமனைக்குத்தானே போக வேண்டும்.

மருத்துவமனையில் என்ன இருக்கப் போகிறது? குளுக்கோஸ் பாட்டில்களும் மருந்துகளும்தானே. அது யாருக்கு வேண்டும்? கதை நாயகனுக்கு வேண்டியதெல்லாம் வில்லன்களும் அடியாட்களும் அவர்களுடனான சண்டைகளும். அப்படியும் ஓர  வஞ்சனையாகச் சொல்லி விட முடியாது. இந்த வேண்டியன எல்லாம் கதை நாயகனுடைய ரசிர்களுக்கு வேண்டியன. கதை நாயகனுக்கான பிம்பத்துக்கு வேண்டியன.

தன் காரை மோதிய லாரி எங்கே போயிருக்கும் என்பதையும் கதை நாயகனால் கணிக்க முடிகிறது. அவன் அந்த இடத்துக்குப் போகிறான். தன் காரை மோதிய லாரியைப் பார்க்கிறான். லாரியைச் செலுத்திய டிரைவரை ஒரு ஓட்டலுக்குள் அல்லது மோட்டலுக்குள் கண்டுபிடித்துப் புரட்டிப் புரட்டி எடுக்கிறான்.

ஏன் என் மீது மோதினாய் என்று கதை நாயகன் கேட்கிறான். அப்படியே அவர்கள் சண்டை போட்டுக் கொண்டு எப்படி நடுரோட்டிற்கு வந்தார்களோ? அந்த லாரி டிரைவரை இன்னொரு லாரி அடித்துப் போட்டு விட்டு போகிறது. இது முற்பகல் செய்வது பிற்பகலில் விளைவதாக இருக்கலாம். அல்லது எதார்த்தமாகவும் இருக்கலாம். வில்லனுக்கெல்லாம் வில்லனான இன்னொரு பெரிய வில்லனின் கைங்கர்யமாகவும் இருக்கலாம். லாரியில் அடிபடுபவன் நேராகத் தூக்கி எறியப்படுவானா? அல்லது கிரிக்கெட் மட்டையில் பட்ட பந்தைப் பக்கவாட்டில் ஆட்டக்காரன் விளாசுவதைப் போலப் பக்கவாட்டில் தூக்கி எறியப்படுவானா? லாரி டிரைவர்காரன் பக்கவாட்டில் தூக்கி வீசப்படுகிறான்.

இப்படி அடிபட்டுக் கிடக்கும் லாரி டிரைவரிடம் கதைநாயகன் கேட்கிறான், தன்னைக் கொல்ல ஆள் அனுப்பியது யார் என்று?

நான்தான்டா! உன்னைக் கொல்ல ஆள் அனுப்பியது நான்தான்டா! என்று கத்த வேண்டும் போலிருந்தது.

திரையில் இது ஒரு பிரச்சனை. வில்லனின் ஆட்கள் கதைநாயகனைச் சரியாகக் கொல்லாமல் விட்டு விட்டு ரசிர்களுக்குத் தீம்பு தேடிக் கொடுத்து விடுவார்கள். இதற்குப் பதில் கதை நாயகனின் காரின் மேல் மோதும் லாரி சுக்கல் சுக்கலாகச் சிதறுவது போலக் காட்சியை அமைக்கலாம். அடுத்து வரும் திரைகளில் நாம் இதையும் எதிர்பார்க்கலாம். இயக்குநர்களுக்குத் தேவையானது எல்லாம் ரசிகர்களை வாயைப் பிளக்க வைக்கும் புதுமைதான். காருக்கோ, லாரிக்கோ, ரசிக்கும் மனதின் தர்க்கத்துக்கோ சேதாரம் ஏற்படுவதைப் பற்றி அவர்களுக்கு என்ன கவலை?

*****

25 Apr 2024

தீ பரவட்டும்!

தீ பரவட்டும்!

இன்றைக்கு எல்லாவற்றிற்குமான வாய்ப்புகள் வந்து விட்டன.

வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.

பயன்படுத்துவதா பெரிது? அதற்கான மனநிலை வர வேண்டுமே!

அதுவரை பேஸ்புக் அணைந்து கிடக்க வேண்டியதுதான். ஜூம், கூகுள் மீட் எல்லாம் ஓய்ந்து கிடக்க வேண்டியதுதான். டிவிட்டர், ஸ்பாட்டிபை, இன்ஸ்டா என்று என்னனென்னவோ எல்லாம் இருக்கின்றன. எல்லாம் அப்படியே கிடக்க வேண்டியதுதான்.

உங்களது உலகத் தரமான பேச்சை யூடியூப்பில் பதிவேற்றி வாட்ஸாப்பில் உலவ விடலாம்.

தீப்பிடித்தால் எல்லாம் சாத்தியம்.  எப்போது பிடிக்கப் போகிறதோ தீ?

அதுவாகப் பிடிக்காவிட்டாலும் பேஸ்புக்கிலோ, டிவிட்டரிலோ தீ பிடிக்காமலா இருக்கிறது? ஏதோ ஒரு தீ பிடித்து எரிந்து கொண்டுதான் இருக்கிறது. தீயணைப்புத் துறை அமைதியாக இருக்கிறது.

யாருக்காகவும் எதற்காகவும் காத்திருக்க வேண்டாம். யாரையும் எதையும் தேடித் திரிய வேண்டாம். கையில் அலைபேசி இருக்கிறது. ஒரு காணொளி அழைப்பு செவ்வாயில் இருப்போரையும் வாய் திறக்க வைத்து விடும். உங்கள் அலைபேசியை வைத்து சந்திரனின் பார்க்க முடியாத பள்ளத்தையும் உற்றுப் பார்த்துக் கொண்டு இருக்கலாம்.

அலைவது வீண். தேடிப் போய் பேசுவது வீண். என்னதான் செய்வது?

உங்களுக்குக் குழப்பம் இல்லை என்பதை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் குழப்பம் இருக்கும்.

தனி ஒரு வயிற்றுக்கு உணவில்லை என்று அழுதால் சொமோட்டோ உணவு கொண்டு வரலாம். பிச்சையெடுப்பது எளிதானது என்பதை உங்கள் கையிலிருக்கும் அலைபேசி உங்கள் சிந்தனையிலிருந்து மறைக்கலாம்.

எப்படி வழி தேடப் போகிறீர்கள் என்பது உங்களுக்கே தெரியாது. வருங்காலத்தில் எப்படியோ தேடுவீர்கள். ஆரம்பத்தில் எல்லாம் அசட்டுத்தனமான வழிகள். பிறகுதான் நெறிபடுத்த வேண்டும். அவசரமில்லை.

நெறிப்படுத்தப்பட்ட வழியில் ஒருவர் அபத்தமாகத் தேடத் தொடங்கலாம். ஆரம்பம் எப்போதும் அப்படியே. அவராகவே நெறிபடுத்தப்பட்ட வழிக்கு வரலாம். இங்கு ஒன்றுதான் முக்கியம். அது அவசரப்பட முடியாது.

ஒருநாள் நீங்கள் எதிர்பார்க்கும் திசையில் பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் தீப்பற்றக் கூடும். அதுவரை அது அடங்கிக் கிடக்கும். அல்லது பற்றிக் கொண்டு எரிந்து கொண்டிருக்கும் திசையில் தீ எரிந்து கொண்டிருக்கும். இஷ்டப்படியெல்லாம் பற்ற வைக்க இதென்ன நெருப்புப் பெட்டியிலா இருக்கிறது? மனப்பெட்டியில் ரொம்ப பத்திரமாக இருக்கிறது.

*****

22 Apr 2024

மருத்துவர்களா? பொறியாளர்களா? அவர்கள் குழந்தைகளா?

மருத்துவர்களா? பொறியாளர்களா? அவர்கள் குழந்தைகளா?

போகிறப் போக்கைப் பார்த்தால் பிள்ளைகள் மருத்துவம், பொறியியல் தவிர வேறு எதற்கும் படிக்க மாட்டார்கள் போலும்.

அது முடியாமல் தங்கள் முடிவுகளை மாற்றிக் கொண்ட பிள்ளைகள்தான் ஆசிரியர்களாகவும், எழுத்தர்களாகவும், கணக்காளர்களாகவும், மின் பணியாளர்களாகவும், வீட்டுப் பராமரிப்புப் பணியாளர்களாகவும் நமக்குக் கிடைத்திருக்கிறார்கள் போலும்.

இந்தச் சமூகத்தில் ஒரு குழந்தையானது குழந்தையாக வளர்வது அபூர்வம்தான். குழந்தைகள் பெரும்பாலும் மருத்துவர்களாகவோ, பொறியாளர்களாகவோத்தான் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பள்ளிக் கூடத்தில் சேர்ப்பது எதற்காக? அறிவையும் மனிதத் தன்மையையும் வளர்த்துக் கொள்வதற்குத்தான் இல்லையா? இதைப் பற்றி நாம் ஏன் பேச மாட்டோம் என்கிறோம்? மருத்துவர் ஆவதையும் பொறியாளர் ஆவதைப் பற்றியும்தான் நாம் பேசுகிறோம். நம் நினைப்பே எப்போதும் அப்படியாக மாறி விட்டது.

பிள்ளைகளை ஏன் நாம் அப்படி மாற்ற நினைக்கிறோம்? மருத்துவராகி அந்தத் துறையை மேம்படுத்தவா? மக்களுக்குச் சேவை செய்யவா? அல்லது பொறியாளராகி மக்களின் பிரச்சனைகளையெல்லாம் தீர்க்கவா? தொழில்நுட்பங்களை மேம்படுத்தவா? இந்த இரண்டில் ஒன்றாகி விட்டால் எப்படியும் வாழ்க்கையை ஓட்டுவதற்கான, வாழ்க்கையை வசதிப்படுத்திக் கொள்வதற்கான பணத்தைச் சம்பாதித்து விடலாம் என்ற எதிர்பார்ப்பில்தானே! குழந்தைகளை மருத்துவராக்கவும் பொறியாளராக்கவும் செய்யும் முயற்சிகள் எல்லாம் பணத்திற்காகப் பணயம் வைப்பதற்காகத்தானே!

மனித வாழ்க்கையைப் பணம் அவ்வளவு பயமுறுத்தி வைக்கிறது. பணம் இல்லாமல் எப்படி வாழ்வது? பணத்தை வைத்திருப்பவர்கள் மட்டும் நன்றாக வாழ்க்கிறார்களா என்ன? பணமில்லாமல் வாழ முடியாது என்பது போல வாழ்க்கையில் பணத்திற்கான இடம் என்ன என்பதைப் புரிந்து கொள்ளாமல் நிம்மதியாகவும் மன அமைதியாகவும் வாழ்ந்து விட முடியாது. இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாவிட்டால் பணத்திற்காக நிம்மதியையும் மன அமைதியையும் தொலைத்த மருத்துவர்களையும் பொறியாளர்களையும்தான் பெற்றோர்கள் உருவாக்க வேண்டியிருக்கும். அதற்காகப் பெற்றோர்கள் தாங்களும் கஷ்டப்பட்டு, தங்கள் பிள்ளைகளையும் கஷ்டப்படுத்தி ஒரு கஷ்ட காலத்தை உருவாக்கி அதையே தொடர்ந்து கொண்டிருக்க வேண்டியிருக்கும். இதைப் புரிந்து கொள்ளாமல் போனால் கஷ்ட காலத்தின் மாறாத சுழற்சி மீண்டும் மீண்டும் தொடரவே செய்யும்.

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே பார்க்க வேண்டும். அவர்களை மருத்துவர்களாகவோ, பொறியாளர்களாகவோ பார்க்கக் கூடாது. அவர்கள் தங்கள் ஆர்வம் மற்றும் விருப்பத்தின் காரணமாக அவர்கள் மருத்துவராகலாம், பொறியாளராகலாம். ஆனால் பெற்றோர்களின் ஆர்வம் மற்றும் விருப்பத்தின் காரணமாக அப்படி ஆகி விடக் கூடாது. ஏனென்றால் அப்படி ஆகுபவர்கள் அந்தத் துறையின் மேல் உண்மையான ஆர்வமோ அர்ப்பணிப்போ உடையவர்களாக இருப்பார்கள் என்று சொல்லி விட முடியாது.

ஒரு குழந்தையிடம் நீ மருத்துவர் அல்லது நீ பொறியாளர் என்று சொல்லி வளர்ப்பது கூட ஒரு வகை வன்முறைதான். பிற்காலத்தில் அப்படி ஆக முடியாத குழந்தைகள் அதன் காரணமாகப் பெருத்த மன உளைச்சலை அடையவும் வாய்ப்பிருக்கிறது. அப்படி ஆக முடியாததை ஏற்றுக் கொள்ள முடியாமல் தன்னுயிரை நீத்துக் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.

பெற்றோர்கள் அது பற்றி அவர்களிடம் பேசவே கூடாதா என்றால் பேசலாம், வழிகாட்டலாம். வழிகளை அவர்களின் விருப்பதின் பேரிலும் ஆர்வத்தின் பேரிலும் அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கான சுதந்திரத்தையும் அவர்களின் ஆர்வத்தையும் விருப்பத்தையும் மதித்து நேசிக்கிறோம் என்ற உணர்வையும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தர வேண்டும்.

இப்படிப்பட்ட நினைப்பில்தான் நான் பலரிடம் பேசுகிறேன், பழகுகிறேன். இந்தக் கருத்துகளைப் பலரிடம் எடுத்தும் சொல்கிறேன். இதே நினைப்பில் நான் எல்லாரையும் மனிதராக மட்டும் பார்க்கிறேன். அவர்கள் என்னவாக இருக்கிறார்கள் என்பதைக் கூட சில நேரங்களில் மறந்து விடுகிறேன். இது எனக்கு அண்மையில் ஏற்படுத்திய அனுபவம் ஒன்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

சமீபத்தில் நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது வழக்கமான பல விசயங்களைப் பேசி விட்டு முடிவில், இப்போ எங்கப்பா இருக்கே என்றேன். மருத்துவமனையில் இருப்பதாகச் சொன்னார் அந்த நண்பர். சட்டென்று என்னையும் அறியாமல் உடம்புக்கு என்னப்பா என்று கேட்டு விட்டேன். ஒரு மருத்துவர் மருத்துவமனையில்தானே இருக்க முடியும் என்று அவர் சொன்ன போதுதான் அவர் மருத்துவர் என்ற விசயமே எனக்கு உறைத்தது. இப்படியும் சில நேரங்களில் நிகழ்ந்து விடுகிறது.

*****

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...