13 Apr 2026

ஒரு கிலோ பிரியாணியும், ஐந்து விரல் சாபமும்!

ஒரு கிலோ பிரியாணியும், ஐந்து விரல் சாபமும்!

கூட்டத்தை எப்போது கூட்ட வேண்டும், எப்போது கலைக்க வேண்டும் என்பது தெரிந்தால் நீங்களும் ஓர் அரசியல்வாதிதான்.

மக்களும் முட்டாள்கள் இல்லை. அவர்களுக்கு அனைத்தும் தெரியும்.

அரசியல் கட்சிகள் ஒரு பிசினஸ் மாடலில் ஓடும்போது, மக்கள் மட்டும் ஏன் தர்மகர்த்தா மாதிரி யோசிக்க வேண்டும்?

ஓர் அரசியல் கூட்டத்திற்குப் போனால் இருநூறோ, முந்நூறோ கிடைக்கும் என்று மக்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள். இதைப் பொருளாதாரப் பகுத்தறிவு எனலாம்.

இன்றைய அரசியலில் புனித பிம்பங்கள் எல்லாம் காலாவதியாகிவிட்டன. காந்தி, காமராஜர் போல யாரும் இப்போது புனிதம் வேடம் போடுவதில்லை.

மக்களுக்கும் தெரியும் இவர்கள் பணம் கொடுத்து ஜெயித்தவர்கள் என்று.  தலைவர்களுக்கும் தெரியும் இவர்கள் காசு வாங்கித்தான் ஓட்டுப் போட்டார்கள் என்று.

இரு தரப்புமே ஒருவருக்கு ஒருவர் நடித்துக் கொள்கிறார்கள். இது ஒரு பரஸ்பர நடிப்பு விழா.

அரசியல்வாதி வெளியில், நான் உங்களுக்குச் சேவை செய்யப் பிறந்தவன் என்று சொல்லிக் கொண்டாலும், மனதுக்குள் போட்ட முதலை எப்படி எடுக்கப் போகிறோம் என்பதை யோசித்தபடி இருக்கிறார்.

மக்களும் நீங்கள்தான் எங்கள் கடவுள் என்று வெளியே சொல்லிக் கொண்டாலும், மனதுக்குள் ஓட்டுக்கு இன்னும் ஒரு ஐநூறு ரூபாய் எக்ஸ்ட்ரா கொடுத்தால் குறைந்தா போய் விடுவார் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இன்று அரசியல் என்பது ஒரு மிகப்பெரிய தொழிற்சாலை. இங்கே முதலீடு அதிகம். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலைக் காக்கப் பணம் தருகிறார்கள். கான்ட்ராக்டர்கள் தரமற்ற வேலையைக் கண்டு கொள்ளாமல் இருக்க கமிஷன் தருகிறார்கள். இப்படி அரசியல்வாதிகளுக்குப் பணம் வர, அவர்கள் வேட்பாளர்களாகும் போது ரிட்டர்ன் ஆன் இன்வெஸ்ட்மென்ட் கணக்குப் பார்த்து செலவு செய்கிறார்கள்.

கட்சிகள் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதே அவரது செலவு செய்யும் தகுதியை வைத்துத்தான். இவர் நல்லவர் என்பதை விட, இவர் கரன்சியால் மக்களை எந்த அளவுக்குக் குளிப்பாட்டுவார் என்பதுதான் இன்றைய தகுதித் தேர்வு.

அக்காலத்தில் மக்கள் தரையில் உட்கார்ந்து, சொந்தக் காசில் வேர்க்கடலை வாங்கித் தின்றபடி தலைவர்களின் பேச்சைக் கேட்டார்கள். இன்று, இருக்கையில் பிரியாணிப் பொட்டலம் இல்லை என்றால் தலைவரைப் பார்க்கக் கூட ஆள் வருவதில்லை. அந்தப் பிரியாணி பொட்டலத்தோடு தரப்படும் தண்ணீர் பாட்டிலிலும் தலைவரின் முகம் சிரிக்கிறது.

ஆனால் ஒரு தர்க்கம் இடிக்கவே செய்கிறது. வாக்காளர் வாங்கும் அந்த ஆயிரம் ரூபாயோ, ஒரு பொட்டலம் பிரியாணியோ அவர்களது கேள்வி கேட்கும் உரிமையை அப்படியே லபக் செய்து விடுகிறது. ஜனநாயகத்தின் அடிப்படையான இந்தக் கேள்விக் கேட்கும் உரிமை போய் விட்டால், அங்கே மிச்சம் என்ன இருக்கிறது?

வாக்காளர் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடும் போது இன்னொன்றும் நிகழ்கிறது. அது என்னவென்றால், வாக்காளர் ஒரு விரலை நீட்டி ஊழல்வாதி என்று ஓர் அரசியல்வாதியைச் சொல்லும்போது, மற்ற மூன்று விரல்களும் நீயும் அந்த ஊழலில் பங்கு வாங்கி பிரியாணி தின்றவர்தானே என்று சொல்லும்.

மேலும் நோட்டை வாங்கிக் கொண்டு ஓட்டைப் போடும் போது ஒரு மாயாஜாலமே நடக்கும். அரசியல் என்பது வாரிசுத் தொழில் ஆகி விடும். அதாகப்பட்டது, தேசியத் தலைவர் மகன் அடுத்த தேசியத் தலைவர். மாநிலத் தலைவர் மகன் அடுத்த மாநிலத் தலைவர். மாவட்டத் தலைவர் மகன் அடுத்த மாவட்டத் தலைவர். தப்பித்தவறி வேறு யாராவது உள்ளே வந்தால், அவர்கள் மாலை போடவும் வாழ்க சொல்லவும் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

இதெல்லாம் சகஜமப்பா என்ற மனநிலைதான் நம் ஜனநாயகத்தின் ஆகப்பெரிய எதிரி. ஓர் அரசு தன் கடமையைச் செய்வதைச் சாதனை என்று விளம்பரம் செய்கிறது. அதை எதிர்க்கட்சி வேதனை என்கிறது. இதற்கு நடுவில் உண்மையான மக்களாட்சி மூச்சுத் திணறிக்கொண்டிருக்கிறது.

ஆனால், மாற்றத்திற்கான முணுமுணுப்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கேட்கத்தான் செய்கின்றன. எத்தனை காலம்தான் அவர்கள் வாங்கிக் கொண்டே இருப்பார்கள், இவர்கள் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்? அதிலும் ஒரு மாற்றமோ, புரட்சியோ வெடிக்கக் கூடும். அப்போது ஜனநாயகத்தில் தேர்தல் என்பது திருத்தி எழுதப்படும்.

*****

12 Apr 2026

தங்கம் தழுதழுத்த கதை!

ஒரு தோழியும் ஓர் அழுகையும்!

அகிலா வீடு தேடி வந்து அழைத்த போது குரலில் அத்தனை ஈரம். அவசர மருத்துவச் செலவு, என்றாள். பணம் இல்லாவிட்டால் எல்லாம் பணால் ஆகி விடும் என்றாள். கண்ணீரில் நனைந்த அந்தச் சொற்களைக் கேட்டதும் இனியாவின் இதயம் மெழுகாக உருகியது.

ஆனால் இனியாவின் வங்கிச் சேமிப்போ பாறையாகக் கல்லாய்க் கிடந்தது. கையில் பணமில்லை, ஆனால் கையில் அதாவது மணிக்கட்டில் தங்கம் இருந்தது. அது வளையல்.

அடுத்த மாசமே மீட்டுத் தந்துடுவேன்டி, என்று அகிலா சொன்னபோது, அகிலாவின் கண்களை விட இனியாவின் வளையல்கள் பிரகாசமாக மின்னின.

கணவரிடம் சொன்னால் லாஜிக் பேசுவார் என்று பயந்து, ரகசியமாக அந்தத் தங்கத்தை அகிலாவின் கையில் தாரை வார்த்தாள் இனியா.

நம்பிக்கை என்பது ஒரு அழகான கண்ணாடி. அதை ஒருமுறை அடகு வைத்தால், திரும்பக் கிடைக்கும்போது விரிசலோடுதான் கிடைக்கும் என்பது அப்போது இனியாவுக்குத் தெரியவில்லை.

மாதங்கள் ஓடின. அகிலாவும் எங்கே ஓடினாள் என்று தெரியவில்லை.

இனியா போன் செய்யும்போதெல்லாம் அந்த நண்பி அகிலா ஒரு சிறந்த திரைக்கதை ஆசிரியராக மாறினாள்.

இந்தா நாளைகேக் ஒரு செக் கிளியர் ஆகப்போகுது, என்றாள்.

செக் கதை சொல்லி அலுத்துப் போன பிறகு, நாளைக்குச் சாயங்காலம் நாலு மணிக்கு உன் கைக்குத் தங்கம் வந்துடும், என்றாள்.

இப்படி அகிலா சொன்ன நாளை என்பது, விக்கிரமாதித்தன் கதையில் வரும் வேதாளம் போல மீண்டும் மீண்டும் முருங்கை மரம் ஏறிக்கொண்டே இருந்தது.

ஒரு கட்டத்தில், அகிலாவின் போன் சுவிட்ச் ஆஃப் மோடுக்குச் சென்றது. அதுவரை தழுதழுத்த அவள் குரல், இப்போது தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டது.

இனியா விசாரித்தபோதுதான் தெரிந்தது, அந்தப் புண்ணியவதி வளையல்களை வைத்து மருத்துவச் செலவு ஏதும் செய்யவில்லை. ஏதோ ஒரு ஆன்லைன் பிசினஸில் போட்டு, அதை அம்பானி ரேஞ்சுக்கு வளர்க்கப் பார்த்து, கடைசியில் ஆப்பனியாகி நஷ்டமடைந்திருக்கிறாள்.

வேறு வழியின்றி, கணவரிடம் சொல்லவும் முடியாமல், சொல்லி மெள்ளவும் முடியாமல் ரத்தக் கண்ணீர் வடிக்காத குறையாக, எப்படியோ வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டிப் பணத்தைச் சேர்த்து நகையை மீட்டெடுத்தாள் இனியா.

எப்படியோ நகையை மீட்டெடுக்க முடிந்த இனியாவுக்கு, அதன் பிறகு அகிலாவின் நட்பை மீட்டெடுக்க முடியாமலேயே போய் விட்டது.

நீதி என்னவென்றால், கொடுப்பது கடன். அதை வாங்கும் அவர்கள் நினைப்பது அது தானம். கடைசியில் கொடுத்தவருக்கு மிஞ்சுவது தியானம்!

*****

வாக்காளரும் வேட்பாளரும் – ஒரு தெருக்கூத்து!

வாக்காளரும் வேட்பாளரும் – ஒரு தெருக்கூத்து!

இதுவரை கூகுள் மேப்பிற்கே தெரியாத உங்கள் வீட்டுச் சந்துக்குள், விலையுயர்ந்த கார்கள் புழுதியைக் கிளப்பிக்கொண்டு நுழைகின்றன என்றால், ஊரில் தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது என்று அர்த்தம்.

வேட்பாளர்கள் இப்போதுதான் முதன்முதலாக உங்கள் தெருவின் மேடு பள்ளங்களை அதாகப்பட்டது சாலைகளை நேரடியாகத் தரிசிக்க தொடங்குவார்கள்.

சட்டமன்ற உறுப்பினர் என்பவர் வெறும் சட்டங்களை இயற்றுபவர் மட்டுமல்ல, உங்கள் ஏரியா சாக்கடை அடைப்பிற்கும், உலகளாவிய பொருளாதாரக் கொள்கைக்கும் இடையே ஒரு பாலமாக இருக்க வேண்டியவர். அவர் உங்கள் சுக துக்கங்களில் பங்கேற்க வேண்டும்.

ஆக மொத்தத்தில் மக்கள் விரும்புவது ஒர் அணுகக்கூடிய மனிதரை. அதாவது, போன் செய்தால் எடுக்க வேண்டும், நேரில் போனால் பார்க்க வேண்டும். ஆனால் பல பிரதிநிதிகள் பதவிக்கு வந்ததும் அவுட் ஆஃப் ரீச் ஆகிவிடுகிறார்கள். அவர்கள் மட்டுமல்ல, அவர்களின் மனசாட்சியும்தான்!

ஒரு மக்கள் பிரதிநிதிக்கு இருக்க வேண்டிய தகுதிகளை விட, இருக்கக் கூடாத கலைகளை மக்கள் இப்போது கூர்ந்து கவனிக்கிறார்கள்.

ஊரில் நியாயம் கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றம் போக வேண்டும். ஆனால் இங்கே மக்கள் பிரதிநிதி அலுவலகமே ஒரு நடமாடும் நீதிமன்றமாக மாறுகிறது. தீர்ப்பு யாருக்குச் சாதகம் என்பது, யார் கொண்டு வரும் கவர் கனமாக இருக்கிறது என்பதைப் பொறுத்தது. இது மாபெரும் அரசியல் கலையாகவே வளர்ந்து வருகிறது.

ஆற்று மணல் முதல் மலை வரை அனைத்தையும் கூறுபோட்டுச் சாப்பிடுவது மக்கள் பிரதிநிதிகளுக்குக் கைவந்த கலையாக இருக்கிறது. இவர்களுக்குத் தேவைப்படும் ஒரே இயற்கை வளம் பணம் மட்டுமே.

சாலை போடுகிறார்களோ இல்லையோ, கமிஷன் வாங்குவதில் ஒரு நேர்மை வைத்திருக்கிறார்கள். தரமான வேலை என்பது மாறி, இவர்களுக்குத் தெரிந்த ஒரே ஒரு விஷயம் தரமான ஊழல் என்பதாக இருக்கிறது. அந்தக் கலையில் வல்லவர்களே அரசியல்வாதிகளாக ஜொலிக்கிறார்கள்.

மக்கள் ஒன்றும் மலையைக் கேட்கவில்லை. தரமான கல்வி, நல்ல ஆஸ்பத்திரி, பிள்ளைகளுக்கு ஒரு வேலை அவ்வளவுதான். லஞ்சம் வாங்காத, சமூக விரோதிகளுக்குப் பெரியப்பாவாக இருக்காத ஒரு மனிதரைத்தான் தேடுகிறார்கள்.

இந்த மக்கள் பிரதிநிதிகள் நேர்மையை மட்டும் மூலதனமாகப் போட்டால், மக்கள் பணத்தையோ, பிரியாணி பொட்டலத்தையோ எதிர்பார்க்க மாட்டார்கள். அவர்களின் நேர்மையே மக்களுக்குப் பெரிய போதை!

மக்களை ஏமாற்றுவது எளிது என்று நினைப்பவர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள் - ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் கையில் ஒரு மெஷின் அதாகப்பட்டது, ஓட்டிங் மெஷின் கிடைக்கிறது. அதில் அவர்கள் வைக்கும் குத்து, பலரது அரசியல் வாழ்க்கைக்கு வைக்கும் முற்றுப்புள்ளியாகாமல் இருக்க வேண்டுமானால், மக்கள் பிரதிநிதிகள் என்பவர்கள் மக்கள் பிரதிநிதிகளாகவே இருக்க வேண்டும். பணத்துக்கும், ஊழலுக்கும், லஞ்சத்துக்கும் அவர்கள் பிரதிநிதிகளாகி விடக் கூடாது!

*****

11 Apr 2026

தி இன்கம்ப்ளீட் மேன் – ஒரு ரேமண்ட் டிராஜெடி!

தி இன்கம்ப்ளீட் மேன் – ஒரு ரேமண்ட் டிராஜெடி!

உலகிலேயே மிகச்சிறந்த சூட் தைப்பது எப்படி என்று தெரிந்த ஒரு மனிதனுக்கு, தன் வாழ்க்கையைச் சரியாகத் தைக்கத் தெரியாமல் போனதுதான் இந்தச் சதிக் காலத்தின் விசித்திரம்.

பொதுவாக, ஒருவன் ஸ்மார்ட்டாக நடந்தால் அவனை ரேமண்ட் மாடல் என்பார்கள். ஆனால், அந்த பிராண்டை உருவாக்கிய விஜய்வட் சிங்கானியாவோ, கடைசியில் மாடலாகக் கூட இருக்க முடியாமல், ஒரு வாடலாகி, பாடமாகிப்போனார்.

சிங்கானியா கட்டிய 37 மாடி ஜே.கே ஹவுஸ் மளிகைக்கடைப் பட்டியல் போல நீளமானது. 6,000 கோடி ரூபாய் அதன் மதிப்பு. அம்பானிக்கு அடுத்தபடியாக இந்தியாவின் காஸ்ட்லி செங்கல் குவியல் அது.

ஆனால், 87 வயதில் அவர் கண்மூடியபோது, ஒரு வாடகை வீட்டில் பழைய பேன் காற்றில், ஏன்டா மகனுக்கு சொத்தை எழுதிக் கொடுத்தோம்? என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

ஆசாமி சாதாரணபட்ட ஆள் இல்லை.

லண்டனில் இருந்து அகமதாபாத்துக்கு அவரே பிளேனை ஓட்டி வந்தவர். ஓர் அசாத்திய விமானியும் கூட.

69,000 அடி உயரத்தில் பலூனில் பறந்து மேகங்களுக்கு ஹலோ சொன்னவர். ஒரு சாகசப் பிரியரும் கூட.

இந்திய விமானப்படையே இவரைப் பார்த்து சல்யூட் அடித்தது. அதெல்லாம் ஒரு காலம்.

ஆனால் பாவம், தரை இறங்கிய பிறகுதான் தெரிந்தது, ஆகாயத்தை விட தரை அதிக ஆபத்தானது என்று அவருக்குப் புரிந்தது.

இவருக்கு இரண்டு மகன்கள். பெரியவன் மதுபடி. இளையவன் கௌதம். சொத்துத் தகராறு வந்தபோது, விஜய்வட் தன் விவேகத்தைப் பயன்படுத்திப் பெரியவனைத் துரத்திவிட்டு, செல்லக் குட்டி கௌதமுக்கு மொத்தப் பங்குகளையும் 2015 இல் எழுதி வைத்தார்.

கம்ப்ளீட் மேன் பிராண்டை உருவாக்கியவர் செய்த இன்கம்ப்ளீட் காரியம் அது.

அதற்குப் பிறகு நடந்த கிளைமாக்ஸ்தான் கவனிக்கப்பட வேண்டியது.

சொத்து கைமாறியதும், பாசம் அவுட் ஆப் ஸ்டாக் ஆகிவிட்டது.

கௌதம் தன் தந்தையை நிறுவனத்தில் இருந்து துரத்தினார். அவர் கட்டிய மாளிகையிலிருந்தே அவரை வெளியேற்றினார்.

ஒரு காலத்தில் பத்மபூஷண் வாங்கிய கைகள், மகன் மீது வழக்குப் போட்டு கோர்ட் வாசலில் வக்கீல் நோட்டீஸைப் பிடித்துக் கொண்டு நின்றன.

விஜய்வட் தன் வாழ்க்கை வரலாற்றுக்கு அன் இன்கம்ப்ளீட் லைப் என்று பெயர் வைத்தார்.

பொருத்தமான தலைப்புதான்.

ஏனென்றால், ஒரு மனிதன் எவ்வளவு பெரிய உயரத்தில் பறந்தாலும், அவன் சொத்துக்களைப் பிரித்துக் கொடுக்கும்போது மட்டும் மூளையைக் கீழே இறக்கி வைத்துவிடுகிறான்.

உங்கள் பிள்ளைகள் மேல் உங்களுக்குப் பாசம் இருக்கலாம். ஆனால், உங்கள் சொத்துக்கள் மேல் உங்களுக்கு அதைவிட அதிகமான பக்தி இருக்க வேண்டும். இல்லையென்றால், நீங்கள் கம்ப்ளீட் மேன் ஆக வாழ்ந்தாலும், இன்கம்ப்ளீட்டாகத்தான் சாக வேண்டியிருக்கும்.

மறைந்த சிங்கானியாவுக்கு நம் அஞ்சலிகள்.

அவர் தைத்த சூட்கள் இன்னும் கம்பீரமாக இருக்கின்றன, அணிந்திருப்பவர்களின் பாக்கெட்டில் பணம் இருக்கும் வரை!

*****

10 Apr 2026

காளிதாஸ் 2 - மிஸ்ஸிங் ஆன தர்க்கமும் ஒரு குழந்தையும்!

காளிதாஸ் 2 – ஒரு திரைப்பார்வை

முதல் பாகத்தில் ரகசியங்களைக் காப்பாற்றிய காளிதாஸ், இரண்டாம் பாகத்தில் அந்த ரகசியங்களைச் சுமக்க முடியாமல் திணறுவது போலிருக்கிறது. ஒரு படம் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு இது முன்னுதாரணமல்ல, ஆனால் ஒரு படம் எப்படித் தப்பிக்கலாம் என்பதற்கு இது ஒரு நல்வழிகாட்டி.

இயக்குநர் ஒரு பெரிய சிலந்தி வலையைப் பின்னுகிறார். அதில் நாமெல்லாம் சிக்கிக்கொள்வோம் என்று அவர் நம்புகிறார். பாவம், அவரே அந்த வலையில் சிக்கித் தத்தளிக்கிறார்.

ஒரு குழந்தை காணாமல் போகிறது. அதைத் தேடி ஒரு தந்தை அலைகிறார். இது உலகளாவிய சோகம். ஆனால், அந்தத் தேடலின் ஊடே திரைக்கதை காணாமல் போகிறதே, அதுதான் மாபெரும் மர்மம்!

படத்தில் குழந்தை காணாமல் போனவுடன் பெற்றோர்களுக்கு ஏற்படும் பதற்றத்தை விட, அடுத்த காட்சி என்னவாக இருக்கும் என்று யூகிக்கத் துடிக்கும் ரசிகர்களுக்கு ஏற்படும் பதற்றம் அதிகம்.

ஒரு துப்பறியும் கதையில் துப்புகள் மெல்ல மெல்லக் கிடைக்க வேண்டும். இங்கே துப்புகள் மழையாகக் கொட்டுகின்றன, ஆனால் குடை பிடிப்பது யார் என்பதில் தான் குழப்பம்.

குழந்தை எங்கே போனது என்பது ஒரு கேள்வி என்றால், அந்தப் பதற்றமான சூழலில் நாயகன் ஏன் இவ்வளவு நிதானமாக ஸ்டைல் செய்கிறார் என்பது ஒரு தத்துவார்த்த கேள்வி.

சுருக்கமாகச் சொன்னால், குழந்தையைத் தேடும் படலத்தை விட, அந்தத் தேடலில் இயக்குநர் ஒளித்து வைத்திருக்கும் அந்த ட்விஸ்ட் இருக்கிறதே, அதுதான் ரசிகர்களின் பொறுமையைச் சோதிக்கும் அக்னிப் பரீட்சை!

இப்படத்தில் லாஜிக் என்பது, மொட்டை மாடியில் காயப்போட்டிருக்கும் துணி காற்றில் பறப்பதைப் போன்றது. எங்கே விழும் என்று யாருக்கும் தெரியாது, விழுந்த பிறகு அது யாருடையது என்பதும் முக்கியமல்ல.

படத்தின் நாயகன் பரத் மீண்டும் காளிதாஸாக வருகிறார். மிடுக்கு குறையவில்லை, ஆனால் அந்த மிடுக்கை என்ன செய்வது என்று தெரியாமல் கேமராவைப் பார்த்து முறைக்கிறார்.  நாயகியின் கண்கள் பேசுகின்றன. ஆனால் உதடுகள் பேசும் வசனங்கள் காதுகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன.

ஒரு குழந்தையைத் தேடும் அவசரத்தில், டூயட் பாடுவது ஏன் என்பது தமிழ் சினிமாவுக்கே வெளிச்சம். பாவம், அந்தத் தீவிரமான சூழலில் நாயகனுக்குக் காதல் சுரப்பது ஒரு மருத்துவ அதிசயம்.

முதல் பாதியில் விறுவிறுப்பு இருக்கிறது. இடைவேளை வரை நம்மை இருக்கையில் கட்டிப்போடுகிறார்கள். ஆனால் இரண்டாம் பாதியில், கட்டை அவிழ்த்துவிட்டு நம்மை எங்கெங்கோ ஓடவிடுகிறார்கள்.

ஒரு மர்மக் கதையில் மௌனம் என்பது ஆயுதம். ஆனால் இங்கே மௌனம் என்பது அடுத்த சீன் என்னவென்று தெரியாத குழப்பம்.

 படத்தில் இசையானது துகளைக் கிழிக்காமல், இதயத் துடிப்பை எகிற வைக்க முயன்று, இறுதியில் ஒரு மிக்ஸி ஓடும் சத்தத்தில் முடிகிறது.

ஒளிப்பதிவு என்பது இருட்டான அறையில் கருப்புப் பூனையைத் தேடும் வேலை. பூனை இருக்கிறதா இல்லையா என்பது முக்கியமல்ல, அந்த இருட்டு அழகாக இருக்கிறது.

 மொத்தத்தில் இது ஒரு மோசமான படம் அல்ல. ஆனால் இது ஓர் அவசியமான படமும் அல்ல.

முதல் பாகத்தின் வெற்றியைக் கொண்டு ஒரு கோட்டை கட்ட முயன்றிருக்கிறார்கள். ஆனால் சிமெண்டிற்குப் பதில் வெறும் மணலைப் பயன்படுத்தியதால், படம் மெல்ல மெல்லச் சரிந்து நம் தலை மேலேயே விழுகிறது.

நீங்கள் ஒரு துப்பறியும் நிபுணர் என்றால், இந்தப் படத்தில் உள்ள ஓட்டைகளைக் கண்டுபிடிப்பதிலேயே உங்கள் வாழ்நாளைக் கழித்துவிடலாம்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், காளிதாஸ் - 2, முதல் பாகத்தின் நிழலில் ஒதுங்க நினைத்து, வெயிலில் சிக்கிக்கொண்ட ஒரு முயற்சி.

இந்தப் படத்திற்குப் பத்துக்கு 4¼ மதிப்பெண்கள் கொடுக்கலாம். அந்த ¼ மார்க் எக்ஸ்ட்ரா கிளைமாக்ஸ் டிவிட்ஸ்ட்டிற்கு. அது மட்டும் இல்லாது போனால் சுற்றிய தலை, படம் நின்ற பிறகும் சுற்றிக் கொண்டே இருந்திருக்கும்.

*****

சாத்தான்குளம் – லத்திகளும் எமதர்மனின் இரட்டை முத்திரையும்!

சாத்தான்குளம் – லத்திகளும் எமதர்மனின் இரட்டை முத்திரையும்!

ஆறு ஆண்டுகள். ஒரு சாமானியக் குடும்பம் அதிகாரத்தின் முரட்டுத்தனமான மிரட்டல்களுக்கும், அலைக்கழிப்புகளுக்கும் இடையே காத்திருந்தது இந்த ஒரு தீர்ப்புக்காகத்தான்.

ஜெயராஜையும் பென்னிக்ஸையும் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று, உடற்கூறியல் பாடப்புத்தகமே மிரளும் வகையில் சித்திரவதை செய்து கொன்ற ஒன்பது காவலர்களுக்கும் (மொத்தம் பத்து, ஒருவர் இறந்து விட்டார்) மதுரை நீதிமன்றம் இரட்டை மரண தண்டனை வழங்கியிருக்கிறது.

அதிகார போதையில், நாங்களே சட்டம், நாங்களே எமன், என்று ஆடியவர்களுக்கு, சட்டம் தன் இரட்டை முகத்தைக் காட்டியிருக்கிறது.

இந்தச் சம்பவத்தில் ஒரே ஒரு வெளிச்சப்புள்ளி தலைமைக் காவலர் ரேவதி. சீருடை அணிந்த மற்றவர்கள் நிழல் உலக மனிதர்களாக மாறியபோது, இவர் மட்டும் மனிதராக இருக்கத் துணிந்தார். ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்குள் போலீஸாரே பொய் சொல்லும்போது, ஒரு போலீஸே உண்மையைச் சொன்னால் அது அதிசயம். அந்த அதிசயம்தான் இன்று ஒன்பது கயவர்களுக்குக் தூக்குக் கயிறுகளைப் பரிசளித்திருக்கிறது.

இந்தச் சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் நீதிபதி முத்துக்குமரன் ஒரு மிக முக்கியமான கசப்பான உண்மையைச் சொல்லியிருக்கிறார்,  நீதிமன்றம் மட்டும் தலையிடவில்லை என்றால், அந்த உடல்கள் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பே உண்மைகள் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் என்று.

ஆயுள் தண்டனை கொடுத்தால், சிறைக்குள் சென்று சில ஆண்டுகள் சோறு தின்றுவிட்டு வந்துவிடலாம், என்று ஏளனம் செய்தவர்களுக்கு, இரட்டை மரண தண்டனை என்பது ஒரு பலமான அறை.

மரணம் என்பது ஒருமுறைதான் வரும். ஆனால் இரட்டை மரண தண்டனை என்பது அந்த மரணத்தின் தீவிரத்தை அதிகார வர்க்கத்தின் ஆழ்மனதில் பதிய வைக்கும் ஒரு குறியீடு.

வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே, ஜெயராஜையும் பென்னிக்ஸையும் இழந்த ஆம்பளை இல்லாத வீட்டுல பொம்பளைகளால என்ன செய்ய முடியும்? என்று கேட்டுச் சிரித்த அந்த அதிகாரக் கொழுப்புக்கு, இன்று ஒரு பெண்ணின் கண்ணீர் பதிலடி கொடுத்திருக்கிறது.

தன் கணவனையும் மகனையும் பறிகொடுத்த ஒரு தாய், இன்று ஆறு ஆண்டுகள் கழித்து நிம்மதியாக உறங்குவார். ஆனால் அந்த ஒன்பது பேரின் தூக்கம் இனி நிரந்தரமாகக் கலைந்துபோகும்.

தமிழகத்தில் இது அரிதிலும் அரிதான தீர்ப்பு. வழக்கமாகச் சட்டத்தைக் கையிலெடுக்கும் காவலர்களுக்குச் சட்டம் கைலாகு கொடுக்கும். ஆனால் இம்முறை சட்டம் தன் கையிலிருக்கும் தராசைத் தூக்கி அவர்கள் தலையிலேயே போட்டிருக்கிறது.

லத்தியால் அடிப்பது வீரமல்ல என்பதை விட, சட்டத்தின் லத்தி எவ்வளவு பலமாகத் தாக்கும் என்பதைச் சீருடை அணிந்த சில கயவர்கள் இனி உணர்வார்கள். அந்தக் கயவர்களுக்குத் தூக்குக் கயிறு காத்திருக்கிறது. இம்முறை அது யாருக்காகவும் வளைந்து கொடுக்காது!

*****

9 Apr 2026

லீடர் – அண்ணாச்சியின் ஆக்சன் ஸ்டோர்ஸ்!

லீடர் – ஒரு திரைப்பார்வை!

பொதுவாக ஒரு நடிகருக்கு முகம் அசையவில்லை என்றால் அதை நடிப்பு வராது என்பார்கள். ஆனால், லெஜண்ட் சரவணனைப் பொறுத்தவரை அது ஒரு ஸ்டைல். பாறை போல உறுதியான முகம், காற்றிலேயே அசையாத தலைமுடி என இவற்றையெல்லாம் பார்க்கும்போது அவர் ஒரு மனிதர் அல்ல, ஓர் அசையாத கொள்கை விளக்கப் படம்.

பொதுவாக மெக்கானிக் என்பவர்கள் காரின் இன்ஜினைப் பிரிப்பார்கள். ஆனால், படத்தில் மெக்கானிக்கான நம் சக்திவேல் ஆகிய லெஜண்ட் சரவணன் காரைப் பிரிப்பதை விட, எதிரிகளின் எலும்புகளைப் பிரிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்.

தூத்துக்குடியில் மகளுடன் கொஞ்சி விளையாடும் ஒரு பாசமலராக அறிமுகமாகும் இவர், காரின் பின்சீட்டில் ஒரு பாட்ஷாவைப் பூட்டி வைத்திருக்கிறார் என்பதுதான் படத்தின் ஒரு வரித் தத்துவம்.

கதையென்னும் கமர்ஷியல் குழம்பு என்னவென்று பார்த்தால், மகள் ஐரீனுடன் வசிக்கும் சக்திவேலுக்கு, துறைமுகத்தில் நடக்கும் ஸ்மக்லிங் விவகாரத்தில் போலீஸ் ஆண்ட்ரியாவுக்கு உதவ விருப்பமில்லை. ஆனால், வில்லன்கள் அவர் மகளைத் தொட்டதும், மாணிக்கம் மோடை மாற்றிவிட்டு, பாட்ஷா மோடில் கியரை மாற்றுகிறார். அதன் பிறகு நடப்பதெல்லாம், லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸில் நடக்கும் ஆடித் தள்ளுபடி போல ஒரே ஆக்‌ஷன் மயம்!

ஆண்ட்ரியா, ஷ்யாம், லால் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே இருக்கிறது, சரவணா ஸ்டோர்ஸில் ஒவ்வொரு செக்‌ஷனுக்கும் ஒரு ஆள் இருப்பது போல.

முந்தைய லெஜண்ட் படத்தில் நூறடி உயரத்தில் நின்ற லெஜண்ட் சரவணன், இதில் தரைக்கு இறங்கி வந்திருக்கிறார்.

ஆக்சன் காட்சிகளில் அவர் காட்டும் வேகம், ஒரு பந்தயக் குதிரைக்கும் ரோபோவுக்கும் பிறந்த கலவை போல இருக்கிறது.

உணர்ச்சிவசப்படும் காட்சிகளில் கூட அண்ணாச்சி மிக நிதானமாக இருக்கிறார்.

குறிப்பாகக் கார் மெக்கானிக் என்பதால் சண்டைக் காட்சிகளில் அண்ணாச்சி வண்டிகளைப் பறக்கவிடுவதில் நல்ல ஸ்பெஷலிஸ்ட் ஆகவும் இருக்கிறார்.

இயக்குநர் துரை செந்தில்குமாரைப் பாராட்ட வேண்டும். அண்ணாச்சிக்கு எதெல்லாம் வராதோ, அதையெல்லாம் கேமரா ஆங்கிள் மற்றும் எடிட்டிங் மூலமே வரவழைத்து விடுகிறார். ஒரு மனிதனை எப்படிப் பேச விடாமல் வைத்தே படம் எடுக்கலாம் என்பதற்கு இந்தப் படம் ஒரு பிஎச்டி ஆய்வு.

படத்தில் மியூசிக்கைக் காது கிழியும் அளவு ஒலிக்க வைத்து, படத்தில் அண்ணாச்சி பேசாத வசனங்களுக்கு ஈடாக இசையமைப்பாளர் ஜிப்ரான் தன் இசைக் கருவிகளை வைத்துப் பேச முயற்சித்திருக்கிறார்.

ஸ்கிரீனில் நடக்கும் ஆக்சனுக்கும் இசைக்கும் சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, தியேட்டரில் யாரும் தூங்கிவிடக் கூடாது என்பதில் ஜிப்ரான் கவனமாக இருந்திருக்கிறார். அதே நேரத்தில் ஜிப்ரானின் பின்னணி இசை இல்லையென்றால், அண்ணாச்சியின் அமைதி நம்மை அச்சுறுத்தியிருக்கும்.

இந்தப் படத்தைப் பார்க்கும்போது ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. பணமிருந்தால் யார் வேண்டுமானாலும் லீடர் ஆகலாம், சினிமாவில் மட்டுமல்ல, நிஜத்திலும் கூட.

அண்ணாச்சிக்கு நடிப்பு வருகிறதோ இல்லையோ, நடிக்க வேண்டும் என்ற அந்த விடாமுயற்சி இருக்கிறதே, அதுதான் படத்தின் உண்மையான ட்விஸ்ட்.

லீடர் ஒரு கமர்ஷியல் சினிமா என்பதால், இதில் லாஜிக் தேடுவது, சரவணா ஸ்டோர்ஸில் போய் தள்ளுபடிக்கு மேல் தள்ளுபடி கேட்பதைப் போன்றது.

ஆக விசயம் இதுதான், லெஜன்டைத் தொடர்ந்து லீடர் மூலமாக அண்ணாச்சி மீண்டும் வந்துவிட்டார், ஆக்சன் செய்கிறார், பறக்கிறார். இதையெல்லாம் பார்த்து ரசிக்க உங்களுக்கு ஒரு தனி இதயம் வேண்டும்.

படத்தின் இறுதியில் பார்ட் 2 வரும் என்று ஒரு க்ளூ கொடுத்திருக்கிறார்கள். இது எச்சரிக்கையா அல்லது கொண்டாட்டமா?

ஆனால் முடிவைச் சொல்ல வேண்டும் இல்லையா? இதுதான் அந்த முடிவு. அது என்னவென்றால், ஒரு மெக்கானிக் நினைத்தால் காரைச் சரி செய்யலாம். ஒரு லெஜண்ட் நினைத்தால் சினிமாவையே மெக்கானிக் ஷாப்பாக மாற்றலாம்!

படத்திற்கு பத்துக்கு 5½ மார்க் தாராளமாகக் கொடுக்கலாம். அந்த அரை மார்க் எக்ஸ்ட்ரா எதற்கென்றால், அண்ணாச்சியின் விதவிதமான காஸ்ட்யூமுக்கு.

*****